Sunday, May 28, 2017

பனிவரகு மஷ்ரூம் புலாவ்

சிறுதானியத்தில் செய்யக்கூடிய லஞ்ச் ரெசிப்பிக்களை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.
பனிவரகு மஷ்ரூம் புலாவ்
தேவையானவை:
பனிவரகு - 200 கிராம்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தேங்காய்ப்பால் - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பனிவரகை சுத்தம் செய்து, 10 நிமிடம் ஊற வைக்கவும். மஷ்ரூமை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கவும், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய், நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பாதியளவு கொத்தமல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் மஷ்ரூம், தேங்காய்ப்பால், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு கொதி வந்ததும், பனிவரகைச் சேர்த்துக் கலக்கி, மீண்டும் ஒரு கொதி வந்ததும், குக்கரை மூடி வெயிட் போட்டு சிம்மில் 10 நிமிடம் வைத்திருந்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் திறந்து, மீதமுள்ள புதினா, கொத்தமல்லித்தழை தூவி லேசாக கிளறிப் பரிமாறவும். இதற்கு புதினா அல்லது கொத்தமல்லித் துவையல், சிப்ஸ், தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு:
புலாவை குக்கரிலிருந்து எடுத்து ஹாட் பாக்சில் வைத்தால், நீண்ட நேரம் உதிரியாக இருக்கும். ஒரு கப் அரிசி எடுத்தால், இரண்டரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். தக்காளியும், மஷ்ரூமும் தண்ணீர் விடுமென்பதால், இரண்டரை கப் போதும். தேங்காய்ப்பால் சேர்த்துதான் இரண்டரை கப் என்பதை மறக்க வேண்டாம்.
நன்றி : ஆரோக்கிய உணவுகள் 

No comments:

Post a Comment