Sunday, August 20, 2017

மன்னார்குடி கொஸ்து

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 2
வெங்காயம் : 2
தக்காளி : 5
பச்சை மிளகாய் : 3
நல்லெண்ணெய் : 2 ஸ்பூன்
கடுகு : 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு : 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் : 2 சிட்டிகை
மஞ்சள்தூள் : 2 சிட்டிகை
சாம்பார்பொடி : 2 ஸ்பூன்
இட்லி மாவு : 1 கரண்டி
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லி : 2 கொத்து
கருவேப்பிலை : 2 கொத்து

செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். அதன் மேல் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய பின், 4 டம்ப்ளர் தண்ணீர் கலந்து கொதிக்கவிடவும். இவற்றுடன் பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், சாம்பார்பொடி, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை இளந்தீயில் வைத்து வாணலியை மூடி விடவும்.

காய்கறிகள் நன்கு வெந்ததும், ஒரு கரண்டி இட்லி மாவு எடுத்து கலந்து ஒருகொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். இதன் மேல் கொத்தமல்லி, கருவேப்பிலையை பொடியாக நறுக்கி கலந்து விட்டால் மன்னார்குடி கொஸ்து தயார்.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அழகிற்கும் ஈடில்லை, மன்னார்குடி இட்லி கொஸ்துவின் சுவைக்கும் ஈடில்லை. சுடச் சுட இட்லியுடன் மன்னார்குடிகொஸ்து தொட்டு சாப்பிட்டு அதன் ருசியில் திளையுங்கள்.
பின் குறிப்பு:
விருப்பமுள்ளவர்கள் இவற்றுடன் கத்தரிக்காயும் சேர்த்து செய்யலாம்.
நன்றி : பொன் முத்து - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment